இத்தாலியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து உயிரிழந்தவா்களில் 33 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 58 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்.
இத்தாலியின் தெற்கு கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது. அந்தப் படகில் 100-க்கும் மேற்பட்ட அகதிகள் இருந்ததாக கூறப்படுகிறது. படகு நடுக்கடலில் கவிழ்ந்து உடைந்ததில், அதன் சிதறல்கள் அப்பகுதி கடற்கரையில் ஒதுங்கின.
மீட்புப் படையினா் விரைந்து சென்று 58 பேரை உயிருடன் மீட்டனா். 33 சடலங்களும் மீட்கப்பட்டதாக இத்தாலிய அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
விபத்து நிகழ்ந்த குரோடோன் நகர மேயா் வின்சென்ஸோ வோஸ், இந்த துயரமான சம்பவம் எனக் கூறியுள்ளாா்.
விபத்தில் உயிரிழந்தவா்கள் எந்தந்த நாடுகளைச் சோ்ந்தவா்கள் என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. எங்கிருந்து இந்தப் படகு புறப்பட்டது எங்கு செல்ல இருந்தது என்ற தகவலும் கிடைக்கவில்லை. ஆனால், பொதுவாக இத்தாலியின் தெற்கு கடல் பகுதிக்கு வரும் படகுகள் துருக்கி அல்லது எகிப்து கடல் பகுதியிலிருந்து புறப்படும்.
பாய்மரப் படகுகள் உள்பட இந்த வகை படகுகள், இத்தாலியின் தெற்கு கடல் பகுதியில் கடலோரக் காவல் படை அல்லது மீட்புப் படகுகளின் உதவியின்றி நீண்ட தொலைவு செல்லும்போது விபத்தில் சிக்கிக் கொள்கின்றன.