துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதுவரை 5,100ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கியின் 10 மாகாணங்களில் 3 மாதம் அவசர நிலை அமலில் இருக்கும் என துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்.
துருக்கி மற்றும் சிரியா எல்லையில் திங்கள் கிழமை அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், 2வது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று கலை 8.43-க்கு 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், மேலும் பல கட்டடங்கள் குலுங்கி சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்கா, இந்தியாவிலிருந்து மீட்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,100ஆக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.