அந்நிய செலாவணி தட்டுப்பாட்டினால் லெபனானில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் தாமதமாவதால் அவை மூடப்படும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
லெபனானில் நிலவும் அந்நிய செலாவணி தட்டுப்பாட்டை அந்த நாட்டு செய்தி நிறுவனம் எல்நாஷா உறுதி செய்துள்ளது.
அந்நாட்டில் மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் உபகரணங்களை வாங்குவதற்கான அமெரிக்க டாலர்களுக்கு மிகவும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு காரணம் லெபனானின் மத்திய வங்கியின் சார்பில் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதே ஆகும்.
பணத்தட்டுப்பாட்டின் காரணமாக மருத்துவமனையில் பணிபுரிபவர்களின் தேவைகளையும் சரிவர நிறைவேற்ற முடியவில்லை. இதனால் மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் லெபனானின் மத்திய வங்கிக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் முக்கியத் துறையான மருத்துவத்துறையில் ஏற்படும் இடையூறு நாட்டிற்கு பாதகத்தை ஏற்படுத்தும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கூறுகின்றனர். அதன் காரணத்தினால் லெபனானின் மத்திய வங்கி மருத்துவமனைக்கான நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய வங்கியின் இந்த புதிய கட்டுப்பாடு தனிநபர்களை மட்டுமல்லாது பல்வேறு நிறுவனங்களையும் நிதி நெருக்கடியில் தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.