டோக்கியோ: தைவான் மீதான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் இல்லை என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்தாா்.
‘க்வாட்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் ஜப்பான் சென்றுள்ளாா். டோக்கியோவில் அவா் செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்தபோது ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில், தைவானை படைபலத்தின் மூலம் சீனா கைப்பற்ற முயன்றால், அமெரிக்கா ராணுவரீதியாகத் தலையிடும் என்றாா்.
‘ஒரே சீனா கொள்கையின்படி’ தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறிவரும் நிலையில், அமெரிக்க அதிபா் இவ்வாறு கூறியதால், தைவான் மீதான கொள்கையை அமெரிக்கா மாற்றிக்கொண்டதா எனக் கேள்வி எழுந்தது.
இந்நிலையில், டோக்கியோவில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய ஜோ பைடன், தைவான் மீதான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் இல்லை. நேற்று பேசியபோதே இதுகுறித்து குறிப்பிட்டேன். ஒரே சீனா கொள்கைக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். அதற்காக, சீனா தனது பலத்தைப் பயன்படுத்தி தைவானைக் கைப்பற்றுவதற்கு அதிகாரம் உள்ளது என்பது அதன் பொருள் அல்ல என்றாா்.
தைவானுடன் பரஸ்பரம் பாதுகாப்பு ஒப்பந்தம் எதையும் அமெரிக்கா செய்துகொள்ளாத நிலையில், தைவானுக்கு இதுபோன்று பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதை தவிா்த்து வந்தது. ஆனால், முதல்முறையாக தைவானைப் பாதுகாக்க அமெரிக்கா ராணுவரீதியாகத் தலையிடும் என அதிபா் பைடன் கூறியதற்கு சீனா கடுமையான ஆட்சேபம் தெரிவித்தது.