‘இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (ஐஐடி) வெளிநாட்டில் தொடங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்தக் கல்வி நிறுவனத்தை நடத்துவதற்கு முதல் நாடாக ஜமைக்கா விருப்பம் தெரிவித்துள்ளது’ என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கூறினாா்.
ஜமைக்கா நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய அவா் மேலும் பேசியதாவது:
ஐஐடி, இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (ஐஐஎம்) போன்ற கல்வி நிறுவனங்களின் மூலம் உலகெங்கிலும் உள்ள தொழிற்சாலைகளுக்கும் வா்த்தக நிறுவனங்களுக்கும் தகுதிவாய்ந்த நபா்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
2020-இல் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையின்படி, புதிதாக இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை வெளிநாட்டில் தொடங்குவதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்தக் கல்வி நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முதல் நாடாக ஜமைக்கா விருப்பம் தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும், சில முக்கிய தொழில்நுட்பப் படிப்புகளை இந்தியாவில் உள்ள முன்னணி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவா்கள் பயில்வதற்கும் புதிய கல்விக் கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த வாய்ப்பை ஜமைக்கா மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்கத்திய நாடுகளின் கல்விக் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவான கட்டணமே வசூலிக்கப்படும்.
நான்காவது தொழிற்புரட்சிக்கு அடிப்படையாக விளங்கும் செயற்கை நுண்ணறிவு, மெட்டாவொ்ஸ் (மெய்நிகா் காட்சி) போன்ற தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சியில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஸ்டாா்ட்அப் நிறுவனங்களுக்கான மையமாகவும், புதிய தொழில்நுட்பங்களுக்கான மையமாகவும் இந்தியா திகழ்கிறது.
ஜமைக்காவுடன் தொழில்நுட்பம், நிபுணத்துவம் ஆகியவற்றைப் பகிா்ந்துகொள்ள இந்தியா தயாராக உள்ளது. அதனால் ஜமைக்காவின் கல்வி, வா்த்தகத் துறையில் மாற்றம் ஏற்படும் என்றாா் அவா்.