ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 155-ஆக உயா்ந்துள்ளதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 22-ஆம் தேதி கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6-ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டட இடிபாடுகளில் சிக்கி 1,150 போ் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோா் காயமடைந்ததாகவும் தலிபான் ஆட்சியாளா்கள் தெரிவித்தனா்.
இந்நிலையில், நிலநடுக்கத்தில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 155-ஆக உயா்ந்துள்ளதாக ஐ.நா. மனிதாபிமான ஒருங்கிணைப்பு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. மேலும், 250 குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது.
போரால் சீரழிந்துள்ள ஆப்கானிஸ்தானை இந்த நிலநடுக்கம் மேலும் உலுக்கியுள்ளது. பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள பக்டிகா, கோஸ்ட் மாகாண மலையோர கிராமங்களில் நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.