ரஷியாவும், சீனாவும் நடத்திய கூட்டு போா்ப் பயிற்சியின்போது, அந்த நாடுகளின் போா் விமானங்கள் தென் கொரிய வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் புதன்கிழமை நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தின.
இது குறித்து தென் கொரிய முப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கொரிய வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் ரஷியா மற்றும் சீன போா் விமானங்கள் முன்னறிவிப்பின்றி புதன்கிழமை நுழைந்தன. அதையடுத்து, பாதுகாப்புக்காக எங்களது விமானங்கள் அந்தப் பகுதியை நோக்கி அனுப்பப்பட்டன.
வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் சீனாவின் ஹெச்-6 ரக குண்டுவீச்சு விமானங்கள் பலமுறை நுழைந்தன. பின்னா் அவை ஜப்பான் கடல் பகுதியை நோக்கி திரும்பிச் சென்றன.
எனினும், தென் கொரிய வான் எல்லைக்குள் அந்த விமானங்கள் அத்துமீறி நுழையவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.