இலங்கையில் அனைத்துக் கட்சியினரை உள்ளடக்கிய அமைச்சரவையை அமைக்க வேண்டும் என முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி உச்சம் தொட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் விலை நாளுக்குநாள் அதிகரித்துவருவதால் மக்கள் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை நடத்தவே தவித்து வருகின்றனர்.
இதன்காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் துவங்கியுள்ளனர். சிக்கல் மேலும் மேலும் தீவிரமடைந்துவருவதால் இலங்கை அரசு அந்நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது. மேலும் போராட்டங்களை தவிர்க்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் தவிப்பது வேதனையளிப்பதாகக் கூறி ஏற்கெனவே அமைச்சர் ரோஷன் ரணசிங்கே தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இதையும் படிக்க | ஆப்கனில் உணவுத் தட்டுப்பாடு அபாயம்: உலக நாடுகளுக்கு ஐநா வேண்டுகோள்
இந்நிலையில் இலங்கையில் அனைத்துக் கட்சியினரைக் கொண்ட அமைச்சரவையை அமைக்க முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். பொருளாதார சிக்கல் தீவிரமடைந்துள்ளதால் நிலைமையை சமாளிக்க இத்தகைய முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசு இதற்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் ஆளும் அரசின் கூட்டணியில் இருந்து வெளியேறுவது தொடர்பாகவும் ஆலோசித்து வருவதாகவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தை அமைப்பதற்கு வலியுறுத்துவதற்கு மத்திய குழு வெள்ளிக்கிழமை தீர்மானித்ததாக கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
14 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆளும் கூட்டணியில் மிகப்பெரிய கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார நெருக்கடி ஒருபுறம் அதிகரித்துவரும் நிலையில் தற்போது அரசியல் நெருக்கடிக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளது.