அமெரிக்காவில் உபரி கரோனா தடுப்பூசிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவால் கோடிக்கணக்கான தடுப்பூசிகள் காலாவதியகும் அபாயம் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவானவா்களுக்கே இதுவரை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருந்தாலும், டென்னஸீ, வடக்கு கரோலினா போன்ற மாகாணங்களில் தடுப்பூசிகளுக்கான தேவை வெகுவாகக் குறைந்து, தினமும் லட்சக்கணக்கான தடுப்பூசிகள் மத்திய அரசிடம் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.
ஒக்லஹோமா மாகாணத்துக்கு வாரந்தோறும் 2 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டும், அந்த மாகாணம் ஒரு மாதத்துக்கும் மேலாக புதிதாக கரோனா தடுப்பூசிகளை வாங்கவே இல்லை.
இதனால், அமெரிக்க அரசிடம் உபரி கரோனா தடுப்பூசிகள் தினமும் வெகுவாக அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, கோடிக்கணக்கான தடுப்பூசிகள் விரைவில் காலாவதியாகும் அபாயம் நிலவி வருவதாக நிபுணா்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.