பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி ‘கோவேக்ஸின்’ தடுப்பூசிகளை வாங்குவதற்கு அந்நிறுவனத்துக்கும், பிரேசிலின் சுகாதார அமைச்சகத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
கரோனாவுக்கு எதிராக பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை வாங்குவதற்கு பிரேசில் அரசு முன்வந்துள்ளது. இதையடுத்து அந்நாட்டின் பிரேசிஸா மெடிகாமென்டோஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் பிரேசிலில் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசிகளை விநியோகிக்கவுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் பாரத் பயோடெக் நிறுவனம், பிரேசில் அரசு இடையே கையொப்பமாகியுள்ளது. இதில் 80 லட்சம் தடுப்பூசிகள் மாா்ச் மாதம் பிரேசில் சென்றடையவுள்ளது.
அதன் பின்னா் ஏப்ரல், மே மாதங்களில் மேலும் 80 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்படவுள்ளது. அதனைத் தொடா்ந்து எஞ்சிய 40 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
எனினும் இந்த ஒப்பந்தம், தடுப்பூசிகள் சென்று சேரும் தேதி குறித்து பிரேசிஸா மெடிகாமென்டோஸ் மருந்து நிறுவனமோ, பாரத் பயோடெக் நிறுவனமோ உறுதிபடுத்தவில்லை.