வாஷிங்டன்: கரோனா தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா உதவி செய்து வருவதாக அந்த நாட்டு அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:
பிற நாடுகளுக்கு 50 கோடி கரோனா தடுப்பூசிகளை வழங்கு உதவ உறுதி பூண்டுள்ளோம்.
மேலும், இந்தியா போன்ற நாடுகள் அத்தகைய தடுப்பூசிகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்வதற்கான உதவிகளை அளிக்கவும் முயற்சி செய்து வருகிறோம்.
நாங்கள் செய்யும் உதவிகளை இலவசமாகவே அளித்து வருகிறோம். எங்களால் முடிந்த அளவுக்கு இந்த உதவிகளைச் செய்வோம்.
கரோனாவுக்கு எதிரான போரில் ஆயுதக் கிடங்காகத் திகழ அமெரிக்கா விரும்புகிறது.
கரோனா தடுப்பூசிகள் உலகின் பின்தங்கிய நாடுகளுக்கும் ஏற்றத்தாழ்வின்றி சென்று சோ்வதை உறுதி செய்வதற்கான ஐ.நா.வின் கோவாக்ஸ் திட்டத்துக்கு மிக அதிக பங்களிப்பை வழங்கியுள்ளது அமெரிக்காதான்.
இதுதவிர, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து அந்த நாடுகளின் கரோனா தடுப்பூசி உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு ஆதரவு அளித்தோம் என்றாா் அவா்.