வரலாற்றில் முதல்முறையாக கரோனா தொற்று காரணமாக ஜி20 உச்சி மாநாடு காணொலிக் காட்சிமூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாள்கள் செளதியில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு செளதி மன்னர் தலைமை தாங்க உள்ளார்.
இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 9ஆம் தேதி மோடி செளதி மன்னர் சல்மான் பின் அப்துல்லாசிஸ் அல் உடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.
நடப்பாண்டு 21ஆம் நூற்றாண்டில் அனைவருக்குமான வாய்ப்புகளைப் புரிந்து கொள்ளுதல் எனும் கருப்பொருளின் கீழ் ஜி20 உச்சி மாநாடு கூட உள்ளது. இதுதொடர்பாக ஜி20 செயலர், வரவிருக்கும் ஜி 20 தலைவர்களின் உச்சி மாநாடு, தொற்றுநோய்களின் போது கண்டறியப்பட்ட பாதிப்புகளை நிவர்த்தி செய்வதன் மூலமும், சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளங்களை அமைப்பதன் மூலமும், உயிர்களைப் பாதுகாப்பதிலும், வளர்ச்சியை மீட்டெடுப்பதிலும் கவனம் செலுத்தும் எனத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய நாடுகள் அவையின் 75ஆவது ஆண்டு விழாவையொட்டி அதன் பொதுச்சபை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.