பாகிஸ்தானில் வேன் தீப்பிடித்து எரிந்ததில் 13 பேர் பலியானார்கள்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 20 பேருடன் வேன் ஒன்று நேற்று கராச்சி-ஹைதராபாத் சாலையில் சென்றுகொண்டிருந்தது. திடீரென அந்த வேன் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் வேன் கவிழ்ந்ததுடன் தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். உடல்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்துவிட்டதாகவும், டி.என்.ஏ பரிசோதனைக்குப் பிறகே இறந்தவர்கள் அடையாளம் காணப்படுவர் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேன் ஓட்டுநர் உட்பட 7 பேர் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனிடையே விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.