உக்ரைனில் விமானப்படை வீரர்களை ஏற்றிச் சென்ற ராணுவ விமானம் தரையிறங்கும்போது வெடித்துச் சிதறியதில் 22 வீரர்கள் உயிரிழந்தனர்.
ராணுவ விமானதளத்திற்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக உக்ரைனின் மாநில அவசர சேவை மையம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை விமானப்படை வீரர்களை ஏற்றிச் சென்ற அன்டோனோவ் அன் -26 என்ற ராணுவ விமானம் வடகிழக்கு உக்ரைனின் தேசிய நெடுஞ்சாலை அருகே வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானது.
விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக 22 விமானப்படை வீரர்களுடன் சென்ற விமானம் தரையிறங்க முயற்சிக்கும்போது வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த 22 வீரர்களும் உயிரிழந்ததாக ஆயுதப்படை ஊழியர் ரஸ்லான் தெரிவித்துள்ளார்.
ராணுவ விமானம் விபத்துக்குள்ளான விடியோவை உள்துறை இணையமைச்சர் அண்டோன் செரஸ்சென்கோ வெளியிட்டுள்ளார். அதில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. உடனடியாக மீட்புப்படையினர் மூலம் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு விமான விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.