இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சீனத் தயாரிப்பு கரோனா மருந்திற்கான மூன்றாவது கட்ட மருத்துவப் பரிசோதனைகள் துவக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய சுகாதார அமைப்பின் செயல் இயக்குநர் ஆமர் இக்ரம் செவ்வாயன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
மூன்றாவது கட்ட பரிசோதனையில் இந்த மருந்தானது நாடுமுழுவதும் 8,000 முதல் 10,000 வரையிலான தன்னார்வலர்களுக்கு அளிக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். இறுதிக்கட்ட முடிவுகள் ஆறு மாதங்களுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பின்னர் இந்த மருந்தானது பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
முதல் கட்டங்களில் விலங்குகளின் மீது நடத்தப்பட்ட சோதனையில் இந்த மருந்து பாதுகாப்பானது என்று முடிவுகள் வெளியாகி உள்ளது. எனவே இந்த சோதனையிலும் முடிவுகள் சரியாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இந்த மருந்தினை பரிசோதனை செய்வதற்கான அனுமதி பாகிஸ்தான் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தினால் வழங்கப்பட்டு, தேசிய சுகாதார அமைப்பின் கண்காணிப்பின் கீழ் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.