நேபாளத்தில் 7 ஆண்டுகள் இடைநீக்கத்திற்குப் பிறகு பயணிகள் உள்ளூர் ரயில் சேவை மீண்டும் தொடங்க உள்ளது.
நேபாளத்தில் ஜனக்பூர்-ஜெயாநகர் இடையே முன்பு குறுகிய ரயில் பாதையில் பயணிகள் ரயில் சேவை வழங்கப்பட்டு வந்தது. எனினும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரயில்சேவை நிறுத்தப்பட்டது.
தற்போது அகல ரயில்பாதை அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பயணிகள் ரயில்சேவை தொடங்கப்பட உள்ளது.
இது குறித்து பேசிய ரயில்வே இயக்குநர் பல்ராம் மிஸ்ரா, ''டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய வகையிலான ரயில் பயன்படுத்தப்பட உள்ளது.
எனினும் தற்போது நடைபெற்று வரும் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து மீண்டும் ரயில்சேவை துவங்குவதற்கு ஒன்றரை மாதங்கள் ஆகலாம். இதற்காக தேவையான அளவிற்கு பணியாளர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது நாட்டின் முதல் அகல ரயில்பாதை சேவையாக உள்ளது. இந்த சேவை ஜனக்பூர்-ஜெயாநகர் அருகே உள்ள குர்தா பகுதியிலிருந்து தொடங்க உள்ளது.
ரயில்சேவையை விரைந்து தொடங்கும் வகையில் 200 பணியாளர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பொறியாளர், ஓட்டுநர், பராமரிப்பு ஆகிய துறைகளில் இந்தியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பயிற்சி பெற்ற பின் நேபாள பணியாளர்களை கொண்டு அவர்கள் மாற்றம் செய்யப்படுவர். இந்த ரயிலில் 1300 பயணிகள் பயணிக்க இயலும், விரைநது நாடு முழுவதும் ரயில்சேவை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்'' இவ்வாறு அவர் கூறினார்.