ரஷியாவில் இன்று அதிகபட்சமாக ஒருநாள் கரோனா பாதிப்பு 17,717 ஆக அதிகரித்துள்ளது.
ரஷியாவில் கடந்த மாதம் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் படையெடுக்கத் தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு 15,000-க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோன்று கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் ரஷியாவில் புதிதாக 17,717 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. ஒருநாளில் கரோனா உறுதி செய்யப்பட்டோரில் இதுவே அதிகமாகும். அக்டோபர் 26 17,347 என்பது அதிகபட்ச ஒருநாள் பாதிப்பாக இருந்தது.
தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 4,906 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 366 பேர் உள்பட இதுவரை 27,301 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரத்தில் தற்போது வரை 11,86,041 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், ஒரேநாளில் 14,700 நோயிலிருந்து மீண்டுள்ளனர்.