கொழும்பு: கொழும்புவின் மகரா சிறையில் ஞாயிறு மதியம் நிகழ்ந்த கலவரத்தில் சிக்கி எட்டு கைதிகள் பலியாகினர். மேலும் ஐம்பது கைதிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹண்ணாவை மேற்கோள் காட்டி, கொழும்பு பேஜ் செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
கொழும்புவின் மகரா சிறையில் ஞாயிறு மதியம் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறையின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள சில கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யபபட்டுள்ளது. இதையடுத்து மற்ற சில கைதிகள் அச்சமடைந்து சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். இதன்காரணமாக கைதிகள் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு இடையே கலவரம் மூண்டுள்ளது. இந்தக கலவரத்தில் எட்டு கைதிகள் பலியாகினர். மேலும் ஐம்பது கைதிகளும் இரண்டு சிறை அலுவலர்களும் படுகாயமடைந்துள்ளனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுடுதல் உள்ளிட்ட நடைமுறைகள் கையாளபபட்டுள்ளது. நிலைமையை முழுவதுமாக கையாள சிறைத்துறை காவலர்களுடன் மேலும் ஐந்து கூடுதல் படைகளும் தற்போது அங்கு நிறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் இந்த சம்பவம் தொடர்பாக சுயாதீன விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படுவதுடன், அமைச்சரவைச் செயலர் தலைமையிலும் சிறப்பு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று, மத்திய சிறைத்துறை சீரமைப்பு மற்றும் கைதிகள் மறுவாழ்வுத் துறை அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுலே தெரிவித்துள்ளார்.
அத்துடன் உண்மையினை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்காக இதுதொடர்பான முழுமையான விசாரணை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.