துபை: துபையைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் அஜய் சோப்ராஜ், கரோனா மருத்துவமனை அமைத்துக் கொள்ள தனது மொத்த சொத்தை துபை நல்வாழ்வுத் துறைக்கு வழங்கியுள்ளார்.
மிகப்பெரிய நகைக்கடையின் உரிமையாளரான அஜய் சோப்ராஜ், இது குறித்து துபை நல்வாழ்வுத் துறை அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில், நான் கடந்த 25 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த துபை மீண்டும் அதே பழைய பொலிவை அடைய வேண்டும் என்பதற்காக, ஜூமேய்ரா லேக் டவர் எனப்படும் மிகப்பெரிய கட்டடத்தை கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக மாற்றிக் கொள்ள வழங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சுமார் 77 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த கட்டத்தில் கிட்டத்தட்ட 400 பேருக்கு சிகிச்சை அளிக்கலாம்.
கடந்த 25 ஆண்டுகாலமாக எனது வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் பேருதவி செய்த இந்த நகர், சொல்லொணாத் துயரில் இருக்கும் போது, நான் அதனை மீட்க இந்த அரசுக்கு உதவி செய்வதற்கு கடமைப்பட்டுள்ளேன் என்றும் அஜய் தெரிவித்துள்ளார்.
துபையில் தற்போது 570 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.