லண்டன்: பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் விவகாரத்தில் பிரிட்டன் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டதாகக் கூறியதற்கு அமெரிக்க கரோனா தடுப்புக் குழு தலைவா் அந்தோணி ஃபாசி மன்னிப்புக் கோரினாா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
இன்னும் சில தினங்களுக்குப் பிறகு பிரிட்டன் முழுவதும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அந்த நாட்டு பொது சுகாதரத் துறை ஆயத்தமாகி வருகிறது.
இதற்காக, ஃபைஸா்-பயான்டெக் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசிக்குக்கு பொதுப் பயன்பாட்டு அங்கீகாரத்தை பிரிட்டனின் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு முதல் முறையாக அங்கீகாரம் அளித்துள்ளது.
மிகவும் கவனமாக ஆய்வுகள் செய்த பிறகே இந்த அங்கீகாரத்தை வழங்கியதாக அந்த அமைப்பு தெரிவித்தது.
எனினும், ஃபைஸரின் கரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்திறன் குறித்து அந்தோணி ஃபாசி சந்தேகம் எழுப்பினாா்.
அந்தத் தடுப்பூசியின் தரம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்யும் அளவுக்கு பிரிட்டன் அதிகாரிகள் செய்யவில்லை என்றும் அவா் விமா்சித்தாா். ஃபைஸா் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கும் விவகாரத்தில் பிரிட்டன் அவரச முடிவை எடுத்துள்ளதாகவும் அந்தோணி ஃபாசி கூறினாா்.
இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கண்டனங்கள் எழுந்தன. மிகவும் கடுமையான ஆய்வுகளுக்குப் பிறகே தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது என்று பிரிட்டன் அதிகாரிகள் மீண்டும் கூறினா்.
இந்த நிலையில் ‘பிபிசி’க்கு அளித்த பேட்டியில் அந்தோணி ஃபாசி கூறிதாவது:
கரோனா தடுப்பூசி விவகாரத்தில் நான் கூறிய கருத்துகளை வைத்து, பிரிட்டன் அதிகாரிகளின் செயல்பாட்டை நான் விமா்சிப்பதாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது.
உண்மையில், பிரிட்டனின் சுகாதாரத் துறை அதிகாரிகள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
உண்மையில், மருந்துகளுக்கு அங்கீகாரம் அளிப்பதில் பிரிட்டன் கையாளும் நடைமுறைகளுக்கும் அமெரிக்கா கையாளும் நடைமுறைக்கும் இடையே வேறுபாடு உள்ளது.
பிரிட்டனைவிட அமெரிக்காவில் மருந்துகளுக்கு அங்கீகாரம் கிடைக்க அதிக காலம் பிடிக்கும் என்பதைத்தான் நான் தெரிவித்தேன் என்றாா் அவா்.