அமெரிக்காவை தவிர்த்துவிட்டு காலநிலை மாற்ற பாதிப்பை சரிசெய்ய முடியாது என ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் தெரிவித்துள்ளார்.
அதிகரித்துவரும் காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் திடீர் மழைப்பொழிவு, அதிகரிக்கும் புயல்கள், உயரும் வெப்பநிலை போன்ற சூழலியல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் அமெரிக்க அரசை புறந்தள்ளிவிட்டு காலநிலை மாற்ற பாதிப்பைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பலனளிக்காது என ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய குடரெஸ், அடுத்த 30 ஆண்டுகளுக்குள் உலகளாவிய கார்பன் வெளியீடு நடுநிலைமையை அடைய வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
மேலும் மனிதகுலம் இயற்கையின் மீது தற்கொலை யுத்தத்தை நடத்தி வருவதாகவும், அமெரிக்காவின் தலைமை இல்லாமல் காலநிலை அவசரநிலைக்கு தீர்வு காண வழி இல்லை என்றும் எச்சரித்தார்.
முன்னதாக கடந்த திங்கள்கிழமை காலநிலை மாற்றம் குறித்து அமெரிக்க அதிபர்(தேர்வு) ஜோ பைடனுடன் குடரெஸ் கலந்தாலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.