நியூயார்க்கில் நியூ ரோச்செல் மற்றும் அல்பானியில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் திடீரென வேலைநிறுத்ததப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், ஒப்பந்த பேச்சுவார்த்தைகளைத் தொடரவும் கோரி அவர்கள் இரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அல்பானி மருத்துவமனையில் என்95 முகக்கவசங்களை அதிகபட்சம் 20 முறை பயன்படுத்த நிர்பந்திக்கப்படுவதாக செவிலியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் பரிந்துரைக்கப்பட்டதைவிட 5 மடங்கு அதிகம் என்று கூறிய செவிலியர்கள், நியூயார்க் மாநில செவிலியர் சங்கத்தின் மூலமாக அமெரிக்க கூட்டாட்சி தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகத்திடம் திங்கள்கிழமை இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.
அதேபோன்று நியூ ரோச்செல் மருத்துவமனைகளிலும் ஊழியர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு பதிலாக தற்காலிக செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அல்பானி மருத்துவமனை தெரிவித்துள்ளது.