வெள்ளிமணி

பத்மாவதி தாயாருக்கு சென்னையில் கோயில்

எஸ். வெட்கட்ராமன்


சென்னையில் நடிகை காஞ்சனா தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில், தியாகராய நகர், ஜி.என்.செட்டி சாலையில் பத்மாவதி தாயாருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு  மார்ச் 17-இல் (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 

உலகப் புகழ்பெற்ற கோயிலான திருமலை} திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சொந்தமாக,  நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.

இதேபோன்று, சென்னையின் முக்கிய வர்த்தகப் பகுதியான தியாகராய நகர், வெங்கட்நாராயணா சாலையிலும் ஒரு வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது.

திருப்பதிக்குச் சென்று பெருமாளைத் தரிசிக்க இயலாதவர்கள் கூட தியாகராய நகரில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசிப்பதுண்டு.  திருப்பதியைப் போல் இங்கும் நாள்தோறும் கூட்டம் அலைமோதும். 

விசேஷ நாள்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்துச் செல்வதுண்டு.  இவரிடம் வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகை காஞ்சனா.  1970 }80}களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200}க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றவர். திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருபவர்.  தற்போது இவருக்கு 84 வயதாகிறது. இவர் திரைப்படங்களில் நடித்து சேர்த்து வைத்திருந்த சொத்துகளை பலர் ஏமாற்றி அபகரித்துக் கொண்டனர்.

இந்தச் சொத்துகளை மீட்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.  அப்போது, வழக்கில் தான் வெற்றி பெற்றால் சொத்துகளையும் திருப்பதி தேவஸ்தானத்துக்கு எழுதி வைப்பதாக வேண்டிக் கொண்டார். அவர் வேண்டிக் கொண்டது போலவே, வழக்கில் வெற்றி பெற்று இழந்த சொத்துகள் அனைத்தையும் திரும்பப் பெற்றார்.  அவர் சொத்துகள் திரும்பக் கிடைத்ததால், சுமார் ரூ.80 கோடி மதிப்பிலான சொத்துகளை திருப்பதி தேவஸ்தானத்துக்கே எழுதிக் கொடுத்துவிட்டார்.

நடிகை காஞ்சனா தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில், தியாகராய நகர் ஜி.என். செட்டி சாலையில் உள்ள ரூ.40 கோடி மதிப்பிலான காலி இடமும் அடக்கம்.  இந்த இடத்தில்தான் 14,880 சதுர அடியில், ரூ.7 கோடி மதிப்பீட்டில்  பத்மாவதி தாயாருக்கு கோயில் கட்ட தேவஸ்தானம் முடிவெடுத்தது. 

ராஜகோபுரம், பிரகாரம்,  முகாம் மண்டபம் என கோயில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக, நிதியை திருப்பதி தேவஸ்தான விதிகளின்படி,  நன்கொடையாக பெறப்பட்டது.

இதனையடுத்து, 2021-ஆம் ஆண்டு பிப். 22-இல் காஞ்சி காமகோடி பீடாதிபதி முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டு, கோயில் கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. மொத்தமுள்ள 6 கிரவுண்டு நிலத்தில் 3 கிரவுண்டு நிலத்தில் கோயிலும், மீதமுள்ள நிலத்தில் மண்டபம், சுவாமி வாகனங்கள் நிறுத்துமிடம், மடப்பள்ளி உள்ளிட்டவையும் கட்டப்பட்டுள்ளன.

தற்போது கட்டப்படும் கோயிலின் கருவறையில், திருச்சானூர் பத்மாவதித் தாயார் கோயிலில் உள்ளது போன்று தாயார் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது."கோயிலுக்குச் சொந்தமாக புஷ்கரணி, வாகன நிறுத்துமிடம் ஆகியவையும் தயாராகி வருகிறது' என தமிழ்நாடு} புதுச்சேரிக்கான திருப்பதி திருமலை தேவஸ்தானத் தலைவர் ஜெ.சேகர் ரெட்டி கூறியுள்ளார்.  

இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT