முன்னோருக்கு திதி கொடுப்பது மரபு. சிவன் மகன் நிலையில் இருந்து வீர வல்லாள மகாராஜாவுக்கு திதி கொடுக்கிறார். மறுநாள் முடியும் சூடுகிறார். இந்த நிகழ்வு மாசி மகத்தன்று நடைபெறுகிறது.
சோழர்கள், பாண்டியர்களுடனும் திருமண உறவு உள்ளவர்கள் ஹொய்சாள மன்னர்கள். ஹொய்சாளப் பேரரசின் கடைசி மாமன்னர் வீரவல்லாள மகாராஜா. கி.பி 1291}இல் தொடங்கி, கி.பி. 1343 வரை கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளையும் வட தமிழ்நாட்டையும் ஆந்திரப் பகுதிகளையும் ஆட்சி செய்தார். அந்த நாட்டின் இரண்டாம் தலைநகரம் திருவண்ணாமலை.
வல்லாள மகாராஜா தினமும் ஈசனுக்கு பூஜை செய்வார். இதனால் அவர் அண்ணாமலையார் கோயிலில் மேற்கொண்ட திருப்பணிகள் ஏராளம். இவர் 4,5}ஆம் பிரகாரங்களுக்கு இடையே உள்ள கோபுரத்தை கி.பி. 1328} ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கி, 1331}ஆம் ஆண்டில் முடித்தார். இந்தக் கோபுரம் "வல்லாள மகாராஜா கோபுரம்' என்றே அழைக்கப்படுகிறது.
அனைத்துச் செல்வங்கள் இருந்தும் மகாராஜாவுக்கு குறை இருந்தது. குழந்தை இல்லாத ஏக்கம் அவரை வாட்டியது. அவர் " சல்லமா தேவி' என்ற பெண்ணை இரண்டாம் மணம் புரிந்தும், பலனில்லை. அண்ணாமலையாரிடம் கண்ணீர் சிந்தி அடிக்கடி தன் தவிப்பை வெளிப்படுத்துவார் வல்லாள மகாராஜா. இதனால், அவருக்கு சிவன் திருவிளையாடலை நிகழ்த்தினார்.
துறவி கோலம் பூண்டு அரசவைக்கு வந்து மகாராஜாவை சந்தித்தார். சிவனடியாரைக் கண்டதும், மகாராஜாவின் மனம் பரவசம் அடைந்தது.
"சுவாமி தங்களுக்கு அடியேன் என்ன உதவி செய்ய வேண்டும்?'' என்று மகாராஜா கேட்டார்.
"எனக்கு தாம்பத்தியத்துக்கு ஒரு பெண் வேண்டும்'' என்றார் துறவி. அரசவையில் இருந்தவர்களுக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. இருப்பினும், துறவியின் விருப்பத்தை பூர்த்தி செய்ய மகாராஜா உத்தரவிட்டார்.
தாசிப் பெண்கள் கிடைக்கவில்லை. இறைவன் திட்டப்படி நடப்பதால், தேடி சென்றவர்கள் ஏமாற்றத்துடன் அரண்மனைக்குத் திரும்பினர். மகாராஜாவே புறப்பட்டு சென்றும் கூட, ஒரு தாசியும் கிடைக்கவில்லை. மன்னர் கவலையோடு அரண்மனைக்குத் திரும்ப அவரது இளையராணி சல்லமாதேவி, சிவனடியாரின் விருப்பத்தை தான் பூர்த்தி செய்து உதவுவதாக கூறினாள்.
துறவியை வணங்கி, ""சுவாமி.. என் கணவர் உமக்கு அளித்த வாக்குறுதி தவறாது. அருணாசலமே நீயே துணை'' என்றபடி கை தொழுது நின்றாள். அடுத்த விநாடி துறவியாயிருந்த அண்ணாமலையார், அழகான குழந்தையாக மாறி தரையில் இருந்தார். சல்லமாதேவி குழந்தையை வாரி எடுத்து உச்சி முகர்ந்தாள். வல்லாள மகாராஜா விரைந்து வந்து, அண்ணாமலையாரின் அருளாடல் புரிந்து கொண்டு கைக்கூப்பி நின்றார்.
அடுத்த விநாடியே குழந்தை ஒளியாக மாறி மறைந்து அசரீரியாய் ஒலித்தது. "" பக்தனே, கலங்க வேண்டாம். உன் பூலோக வாழ்வு முடியும்போது யாமே, உனக்கு மகனாக இருந்து உன் ஈம காரியங்களை செய்து முடிப்பேன். ஒவ்வொரு ஆண்டும் சடங்குகளை செய்வேன்'' என்றது.
சில ஆண்டுகளில் மதுரை சுல்தான் படைகளுக்கும் வல்லாளனுக்கும் போர். ஒரு லட்சத்துக்கும் மேலான வீரர்களைக் கொண்டிருந்த வல்லாளனின் படை முன்பு மதுரை சுல்தானால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் முகாம் அமைத்து தங்கி இருந்தபோது, வல்லாள மகாராஜாவை சுல்தான் நயவஞ்சகமாக ஏமாற்றிக் கொன்றார்.
வல்லாள மகாராஜாவின் இறுதிச் சடங்குகளை பள்ளிகொண்டாப்பட்டு அருகே ஓடும் கௌதம நதிக்கரையில் அண்ணாமலையார் செய்து முடித்தார். அன்று தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று பள்ளிகொண்டாபட்டு கிராமத்துக்கு சென்று வல்லாள மகாராஜாவுக்கு மகனாக இருந்து திதி (தர்ப்பணம்) செய்து வருகிறார் அண்ணாமலையார்.
680-ஆவது ஆண்டாக இந்த ஆண்டு மார்ச் 6}இல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை அண்ணாமலையாரின் சந்திரசேகரர் அம்பாளுடன், திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு பள்ளிகொண்டாப்பட்டு கௌதம நதிக்கரைக்கு வருவார். அங்கு திதி கொடுப்பார். பின்னர் அஸ்திர தேவரால் தீர்த்தவாரி நடக்கும். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பள்ளிகொண்டாப்பட்டுக்கு திரண்டு வந்து தம் மூதாதையருக்கும் திதி கொடுப்பார்கள். வழி நெடுக மண்டக பூஜைகளை ஏற்றுக் கொண்டு அண்ணாமலையார் கோயிலுக்குத் திரும்புவார்.
அரசனுக்குப் பிறகு இளவரசன் பட்டமேற்கும் மரபின்படி மறுநாள் அண்ணாமலையாரின் சோமாஸ்கந்த மூர்த்திக்கு கலச ஆவாகனம் செய்து அபிஷேகம் செய்து மகுடமுடி சூட்டும் விழா நடைபெறும். அப்போது மகராஜாவின் வழி வந்தவர்கள் உடனிருப்பர்.