தெய்வமே இப்பூமியில் அவதரிக்க ஒரு கன்னிப்பெண்ணை அன்னையாகத் தேர்வுசெய்து தாய்மையை பெருமைப்படுத்தியது.
தேவமாதாவைப்பற்றி வேதாகமத்தில் குறிக்கப்பட்டுள்ளது. "இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள்' (ஏசாயா 7.14).
""யார் அந்த கன்னிகை? எப்பொழுது தெய்வ
குமாரனை பெற்றெடுப்பார்?'' என்று ஆவலாகக் காத்திருந்தார்கள் வேத அறிஞர்கள்.
உலக வரலாற்றில் 2020 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி. வேதாகமத்தில் பார்க்கின்றோம். கர்த்தரால் தேவதூதன் பூமிக்கு அனுப்பப்பட்டான். அவன் கன்னி மரியாளிடம் வந்து ""கிருபை பெற்றவரே, வாழ்க! தேவன் உன்னுடனே இருக்கிறார். தேவனுடைய ஆவி உன்மேல் நிழலிடும். நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய். அவருக்கு இயேசு என்று பெயரிடுவாய்'' என்று வாழ்த்தி நற்செய்தியைக் கூறினார்.
மரியாளோ ""இது எப்படி ஆகும்? நான் கன்னி ஆயிற்றே! எப்படி கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றுக்கொள்ள முடியும்?'' என்றார். தேவதூதனோ ""தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை'' என்றான்.
சொல்லியபடியே மரியாள் கர்ப்பவதியானாள். ஒரு 12 வயதுடையவள், இப்பெரிய காரியத்தை தைரியத்துடன் ஏற்றுக்கொண்டாள். மரியாள் இறைவனைப் போற்றிப் பாடிய "மரியாளின் வாழ்த்துப் பாடல்' அவரின் இறை பக்தியை காட்டுகிறது.
எனவேதான் மரியாள் தேவமாதா என்று போற்றப்படுகிறார். அவருக்கு சகாயமாதா, தெய்வ மாதா, தேவமாதா எனவும் பெயர்கள் உண்டு. ஆலயங்கள் அவரின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. தேவமாதாவைப் போற்றுவோம். இறையருள் நம்மோடு!