தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (19-02-2023)

DIN


நெல்லையிலிருந்து ஓவியர் பொன். வள்ளிநாயகம் அழைத்திருந்தார். விஷயம் வேறொன்றுமில்லை. பொருநை இலக்கிய வட்டத்தின் 2000-ஆவது கூட்டம் இன்று நடக்கிறது என்பதை எனக்கு நினைவுபடுத்தத்தான் அவர் அழைத்திருந்தார். முன்பே தெரிந்திருந்தால், சிரமம் பார்க்காமல் ரயிலேறி நெல்லைக்குச் சென்றிருப்பேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வல்லவா இது...

ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லையில் இருந்தால், பொருநை இலக்கிய வட்டத்தின் கூட்டத்தில் பார்வையாளனாகக் கலந்து கொள்வேன் என்று நான் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான இலக்கிய ஆராதனை, பொருநை இலக்கிய வட்டத்தின் வாராந்திரக் கூட்டம். தொடர்ந்து 2000 வாரங்களாக இலக்கிய ஆர்வலர்கள் கூடிக் கருத்துப் பரிமாற்றம் நடத்தும் தமிழ் வழிபாடு என்றுதான் நான் அதைக் கருதுகிறேன்.

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில், "ரசிகமணி' டி.கே.சி-யின் தலைமையில் அறிஞர் பெருமக்கள் கூடி நடத்திய "வட்டத் தொட்டி' குறித்துத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. "வட்டத் தொட்டி' அமைப்பின் நீட்சியாக உருவானதுதான் பொருநை இலக்கிய வட்டம்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் மேலரத வீதியில் அமைந்திருக்கிறது "தமிழகம்' என்று பொறிக்கப்பட்டிருக்கும் தளவாய் மேல அரண்மனை. அதுதான் ரசிகமணியின் பேரன் "தளவாய்' ராமசாமியாரின் இல்லம். "தளவாய்' ராமசாமி, புலவர் சுவாமிநாதன், மு. இராமையா, புலவர் செ.மு. கமால், இல. பார்த்தசாரதி, இரா. அருணாசல காந்தி என ஆறு பேர் கூடி, தாங்கள் தொடங்கும் அமைப்புக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்தார்கள். ஆறு பேர் தொடங்குவதால், ஆறின் பேரே இருக்கலாமே என்று "பொருநை' என்று பெயரிட்டனர் என்று விளையாட்டாகச் சொல்வார் ஓவியர் வள்ளிநாயகம்.

1984-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி, ஞாயிறுதோறும் நற்றமிழ் வேளாண்மை செய்வதற்காகத் தொடங்கப்பட்டது பொருநை இலக்கிய வட்டம். வாரந்தோறும் நான்கு வெவ்வேறு தலைப்புகளில் நான்கு அறிஞர்கள் பேசுவார்கள். அதைக் கேட்க நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளடக்கிய அன்றைய ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழன்பர்கள் அங்கே கூடுவார்கள்.

டிசம்பர் மாதத்தில் நடக்கும் ஆண்டு விழாவில் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க அறிஞர் பெருமக்கள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றி இருக்கிறார்கள். வாழ்த்தி இருக்கிறார்கள். நெல்லைப் பகுதிக்கு ஏதாவது நிகழ்ச்சிக்கு வந்தால், பொருநை இலக்கிய வட்டத்தின் கூட்டத்தில் கலந்துகொள்வதை அவர்கள் பெருமையாகக் கருதுவார்கள்.

கூட்டத்துக்கு வரும் இலக்கிய அன்பர்களை இருகரம் குவித்து வணங்கி வரவேற்கும் தளவாய் ஐயாவின் பண்பு கண் முன்னர் நிற்கிறது. வழக்கமாக வரும் அன்பர்கள் சில வாரங்கள் வராவிட்டால், அவர்களுக்குக் கடிதம் எழுதி விசாரிப்பார்.

தளவாய் ஐயாவின் மறைவுக்குப் பிறகு அவரது மைந்தர் நாதன் (தளவாய் திருமலையப்பன்) பொருநை இலக்கிய வட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார் என்பது மட்டுமல்ல, ஐயாவின் பெயரன்கள் கெளதமும், விக்ரமும் தந்தைக்கு உற்சாகமாக உதவுகிறார்கள் என்பதுதான் குறிப்பிட வேண்டிய செய்தி. 

தமிழ்த் தேரோடும் நெல்லை நகர வீதியில் தனது 2000-ஆவது வார நிகழ்வை நடத்தும் பொருநை இலக்கிய வட்டத்தின் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாதது ஆதங்கம்தான். ஞாயிறன்று நெல்லையில் இருந்தால், தயவுசெய்து பொருநை இலக்கிய வட்டக் கூட்டத்தில் பங்கு பெறாமல் இருந்துவிடாதீர்கள் என்பது எனது அன்பு வேண்டுகோள்!

-----------------------------------------------

நெல்லையில், பொருநை இலக்கிய வட்டம் என்றால், சிங்கையில், மாதந்தோறும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் "கதைக் களம்' என்கிற நிகழ்வை நடத்துகிறது. மாணவர் பிரிவு, பொதுப் பிரிவு என இரு பிரிவுகளாகக் கதைகளைப் பெற்று, அவற்றை முகநூலில் பதிவிட்டு வாசகர்களின் கருத்துகள் பெறப்படுகின்றன.

அத்துடன் அவர்கள் நின்றுவிடுவதில்லை. நூல் அறிமுகம் என்கிற நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ரொக்கப் பரிசுகள் தரப்படுகின்றன. கதைகள் அலசப்படுகின்றன. புதிய எழுத்தாளர்களுக்கு அது ஒரு நல்ல பயிற்சிக் களமாக அமைகிறது.

கதைகளுக்கு வார்த்தை அளவு நிர்ணயிக்கப்படுகிறது. சிங்கப்பூர் சூழலில்தான் கதை அமைய வேண்டும் என்பது நிபந்தனை. 2013-ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட "கதைக் களம்' நிகழ்வுகள் ஆண்டுதோறும் 11 நிகழ்வுகள் என 100 நிகழ்வுகளைக் கடந்துவிட்டது. கொவைட் 19 பெருந்தொற்றுக் காலத்தில்கூட காணொலி வாயிலாக நிகழ்ச்சி நடத்தினார்கள். 

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா. ஆண்டியப்பனுக்கு சென்னையில் நடந்த பாராட்டு விழாவின்போது என்னை சந்தித்த மு. குமரேசன், அவர் எழுதிய "சிங்கப்பூர் சூழலில் சில சிறுகதைகள்' தொகுப்பைத் தந்தார். தமிழ்நாடு காவல்துறை நிர்வாகப் பிரிவில் பணியாற்றி, பணி நிறைவு பெற்றவர் அவர். அவரது மகன் சிங்கப்பூரில் வாழ்வதால் அடிக்கடி அங்கே சென்று வருவதை வழக்கமாக்கி இருப்பவர்.

சிங்கப்பூர் சென்றபோது, "கதைக் களம்' அவரைப் பல சிறுகதைகள் எழுதத் தூண்டியது. அந்தக் கதைகளைத்தான் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். சிங்கை வாழ் தமிழர்கள் எழுதும் கதைகளுக்கும், சிங்கைக்குச் சென்று அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளைப் பார்த்து, ரசித்து எழுதும் கதைகளுக்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்யும். "சிங்கப்பூர் சூழலில் சில சிறுகதைகள்' அதை உறுதிப்படுத்துகிறது.

-----------------------------------------------

தமிழ்நாடு அரசின் இன்றைய தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு 18 ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட கவிதைத் தொகுப்பு "முகத்தில் தெளித்த சாரல்'. அந்தத் தொகுப்பில் நான் குறித்து வைத்திருந்த கவிதை வரிகள் இவை. ஹைகூவுக்கு இறையன்பு தரும் விளக்கம் இது - 
"அசுத்தம்
சோறு போடும்
துப்புரவுத் தொழிலாளி'
ஒரு தமிழ் ஹைகூ
ஹைகூ என்பது விடுகதையல்ல -
சிலேடையுமில்லை.
ஹைகூ என்பது
புனைவு இலக்கியமல்ல -
அது உணர்வு இலக்கியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT