இரப்பார்க்கு உதவாத பொருள்
நாவின் இரந்தார் குறையறிந்து தாமுடைய
மாவினை மாணப் பொதிகிற்பார் - தீவினை
அஞ்சிலென் அஞ்சா விடிலென், குருட்டுக்கண்
துஞ்சிலென் துஞ்சாக்கால் என்? (பாடல்-238)
கண் குருடானால், அவர் தூங்கினாலும் விழித்திருந்தாலும் பயன் ஒன்றுதான். அவர் எதையும் காணமாட்டார். அதுபோலவே, தம் நாவினாலே "ஒரு பொருளைத் தருக' என்று கேட்டவர்களது குறையினைக் கேட்டு அறிந்தும், தம்முடைய செல்வத்தினை மாட்சியமைப்பட பூட்டிக் காப்பவர்கள், பிற தீவினைகளுக்கு அஞ்சினாலென்ன? அஞ்சாவிட்டால்தான் என்ன? அந்த ஒரு தீவினையே அவர்களுக்குக் கேடாக முடிந்துவிடும்! "குருட்டுக்கண் துஞ்சிலென் துஞ்சாக்கால் என்?' என்பது பழமொழி.