பெண்ணின் இல்லற மாண்பை நற்றிணை பாடல் ஒன்று கீழ்க்காணுமாறு குறிப்பிடுகிறது.
"கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்'
(நற்.110)
பெண்களைப் பொருத்தவரை பிறந்தவீடு, புகுந்தவீடு என இரண்டு உண்டு. புகுந்தவீடு வறுமை அடைந்துவிட்டாலும், அக்குடும்பத் தலைவி பிறந்த வீட்டின் வளமான வாழ்வை எண்ணமாட்டாளாம். புகுந்த வீட்டின் நிலைமைக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு வாழக் கற்றுக்கொள்வாளாம் - அப்படித்தான் வாழக் கற்றுக் கொள்ளவும் வேண்டும். அதுவே உயர்ந்த - சிறந்த வாழ்வாகும்.
இந்தக் கருத்து திருக்குறளில் "வாழ்க்கைத் துணைநலம்' அதிகாரத்தில் எதிரொலிக்கிறது.
"மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை' (51)
தம்மைக் கொண்டவனின் வளத்துக்கு ஏற்ப வாழ்க்கை நடத்த வேண்டும். சிறிய வருவாய் என்றால் அதற்குத் தகவும், பெரிய வருவாய் என்றால் அதற்குத் தகவும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே சிறந்தது. அதுவே பெண்ணுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.