அதிவீரராம பாண்டியர் இயற்றியது
"வெற்றி வேற்கை' என்னும் நீதி நூல். "நறுந்தொகை' என்றும் போற்றப்படுகிறது. இந்நூலில், "யானைக்கு இல்லை தானமும் தருமமும்' என்றொரு தொடர் உள்ளது.
தான, தருமத்திற்கும் யானைக்கும் என்ன தொடர்பு என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா! ஆனால், அதன் பொருள் புரிந்து கொண்டால் இலக்கிய நயத்தை அனுபவித்து மகிழலாம்.
"கரி' என்றால் யானை - இது காரணப் பெயர். கரிய நிறம் உடையதால் யானையைக் கரி என்று அழைப்பதாகப் பலர் எண்ணுகிறார்கள். இது தவறு. கரடியும், காண்டா மிருகமும்கூட கருப்பு நிறம்தானே! அவற்றைக் "கரி' என்று நாம் குறிப்பிடுவதில்லையே!
"கரி' என்ற காரணப் பெயருக்குக் "கரம் உடையது' என்று பொருள். விலங்குகளில் யானைக்கு மட்டுமே நீண்ட கரம் (துதிக்கை) உள்ளது. குரங்குக்கும் அணிலுக்கும்கூட கைகள் உள்ளதே என்ற ஐயம் வரலாம். அவற்றுக்கு இருப்பது நான்கு கால்கள். முன்னங்கால்களையே அவை சில சமயம் கைகள்போல பயன்படுத்துகின்றன.
எனவே, கை உள்ள ஒரே விலங்கு யானைதான்! அந்தக் கையை யானை வாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறது. எனவே, கை இருந்தும் வழங்காத காரணத்தால் "யானைக்கு இல்லை தானமும் தருமமும்' என்று நீதி நூலான "வெற்றி வேற்கை' குறிப்பிடுகிறது.