மருத நிலத்தில் ஆற்றிலிருந்து ஓடிவரும் நீராலும், குளத்து நீராலும் வளமான விவசாயத்தை மேற்கொண்டு உயிரினங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் விளைவிக்கப்பட்டன. இவற்றில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் முதலியவை முதன்மையான விளைபொருள்களாகக் கருதப்பட்டன. இவற்றுள் கரும்புக்குப் பலவிதமான சிறப்புகள் உள்ளன.
தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் கரும்பு குறித்த செய்திகள் உள்ளன. இறைவனை நினைத்துப் பாடும் அருளாளர்களும் கரும்பை சிறப்பித்துப் பாடியுள்ளனர். கரும்பில் செங்கரும்போ, அடிக்கரும்போ இன்சுவை தரலாம். ஆனால், கரும்பு வாசனையாக இருக்குமா? அதிலும் கஸ்தூரி மஞ்சள் வாசனைபோல் இருக்குமா? "ஆம், இருக்கும்' என்கிறார் பழம்பெரும் புலவர் பரஞ்சோதி முனிவர்.
ஒரு காலத்தில் புகழ் மணக்கும் திருநெல்வேலி நகரை வளமைப்படுத்தியது தண்பொருநை எனும் தாமிரவருணி. அந்த ஆற்றங்கரையில் குளிக்கும் பெண்கள், தங்களுடைய மேனியில் பூசிய குங்குமமும், சந்தனமும், கஸ்தூரி மஞ்சளும் நதியிலே சங்கமித்து , நறுமணம் கொண்ட தண்ணீராக மாறி அருகிலுள்ள வயல் வெளிகளுக்கும் செல்கிறது. இதனால் அங்கு விளைந்த நெல்லிலும், கரும்பிலும் "கஸ்தூரி மஞ்சள்' வாசனை மணக்கிறதாம்!
"வளைந்த நுண்ணிடை மடந்தையர் வனமுலை மெழுகின்களைந்த குங்குமக் கலவையும், விளைந்த தென் திரைப் பொருநையோ? அந்நதி ஞாங்கர் விளைந்த செந்நெல்லும் கன்னலும் வீசும் அவ் வாசம்!'