விஜய் டி.வியில் ஒளிப்பரப்பாகும் "மெளனராகம்' தொடரில் நடித்து வருபவர் தமிழ்ச்செல்வி. மிகவும் சாதாரண நிலையிலிருந்து சின்னத்திரை மற்றும் சினிமாவில் முக்கிய நபராக ஜொலித்துக்கொண்டிருப்பவர்.
இல்லத்தரசியிலிருந்து இல்லத்திரைக்குள் வந்தது எப்படி என்ற அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:
""நான் படித்தது 10-ஆம் வகுப்பு தான். சிறுவயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. என்னுடைய மகள் பிறந்த பிறகு மேற்கொண்டு எதுவும் படிக்க முடியவில்லை. ஆனால் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. அதனால் அழகுக்கலை பயிற்சியில் சேர்ந்தேன் டிப்ளமோ பட்டம் பெற்றேன். சென்னையிலுள்ள புகழ்பெற்ற அழகுக்கலை நிறுவனம் ஒன்றில் பணியாற்றினேன். அங்கே இயக்குநர் விஷ்ணுவரதனின் உறவினர் மதுமிதா என்பவர் என்னுடைய வாடிக்கையாளர். அவர் என்னைப் பார்த்துமே நீங்கள் சினிமாவில் நடிக்கலாம். அழகான முகம் என்று அடிக்கடி சொல்வார். அவருடைய முயற்சியால் எனக்கு இயக்குநர் ராஜ்கமல் அறிமுகமானார். அவர் இயக்கிய இரண்டு தொடர்களில் என்னை நடிக்க வைத்தார்.
தொடர்நது இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய "சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் நடித்தேன். அது தான் நான் நடித்த முதல் படம். தொடர்ந்து "மெட்ராஸ்', "கிருமி', "இடியட்ஸ்' உட்பட 56 படங்களில் நடித்துவிட்டேன். ஆனாலும் சினிமா நடித்துக் கிடைக்காத புகழ் எனக்குச் சின்னத்திரையில் நடிப்பதால் மட்டுமே கிடைத்தது.
கடந்த வாரம் தஞ்சாவூரில்நடந்த படப்பிடிப்புக்குச் சென்ற போது அந்த ஊரில் வயதான மூதாட்டி நான் வந்திருப்பது தெரிந்ததும் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர் வேலையை விட்டுவிட்டு நந்தினியம்மாவை பார்க்கனும் உடனே வந்துவிட்டார். என்னைத் தேடிப்பிடித்து மூதாட்டி ஒருவர் பார்க்க வந்தது என்னை கண்கலங்க செய்தது.
இந்த நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகவே ஏராளமான சினிமா வாய்ப்புகளைத் தவிர்தேன். காரணம் அந்தளவு அந்தக் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் சென்றடைந்துள்ளது. சாதாரண இல்லத்தரசியாக இருந்த என்னைப் பெண்கள் அவர்களுடைய இல்லத்திரைக்குள் என்னைப் பார்த்து ரசித்து வரவேற்பு கொடுப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த கரோனா காலத்தில் நான் கற்ற பாடத்தைப் பெண்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். என்னுடை கணவர் சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றுகிறார். கரோனா காலத்தில் அவர் தொற்று ஏற்பட்டு விட்டது பரிசோதனையில் தெரியவந்தது. நானும், எங்கள் இரண்டு குழந்தைகளும், அவருடன் தான் இருந்தோம். அதன்பிறகு எங்களுக்கும், குழந்தைகளுக்கும் டெஸ்ட் எடுத்தார்கள். ஆனால் கரோனா இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதிலிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயம் என்னவென்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் கரோனா எதுவும் செய்யாது. அதற்கு நாம் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டியது தாய்ப்பால் முடிந்தளவு கொடுத்துவிட வேண்டும். என்னுடைய குழந்தைகளுக்கு மூன்றரை வயது வரை தாய்ப்பால் கொடுத்தேன். அதனால் தான் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இப்போது அழகு போய்விடும் என பெண்கள் பலர் சில மாதங்களிலேயே தாய்ப்பாலை நிறுத்திவிடுகிறார்கள்'' என்கிறார் தமிழ்ச்செல்வி.