திருமலை ரதி தனஞ்செயன் இலங்கை பெண்மணி. அரசு ஊழியர். அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி பாராட்டுப் பெற்ற அலுவலர். "பாலைநிலம்' என்ற ஈழத்து திரைப்படத்தின் பாடலாசிரியர்,
ரோப்பிய நாடுகளில் வெளியாகும் சில குறும்படங்களுக்கு கதாசிரியர் என பன்முகத் திறன் கொண்டவர்.
தற்போது, மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்று முயற்சித்து வருகிறார். இவரிடம் பேசியதிலிருந்து:
""இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலையில் பிறந்த எனது அம்மா குணநாயகியும் திருகோண மலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவனேசநாதனான எனது அப்பாவும் குடும்ப எதிர்ப்புகளை மீறி காதல் திருமணம் புரிந்தவர்கள். அவர்களின் ஐந்தாவது புதல்வி நான்.
2000-ஆம் ஆண்டில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்றுக் கொண்டிருந்தபோது இறுதியாண்டு பிரியாவிடை நிகழ்வொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்விற்காக பாடல் ஒன்றை எழுதி தருமாறு எனது ரசாயனவியல் ஆசிரியயை ஸ்ரீமதி கேட்டுக் கொண்டதை ஏற்று "பெண் கிளியே..' பாடலின் மெட்டில் "பிரிவு எனும் முள்வந்து இதயத்தை நாராய் கிழிக்க' என்ற பிரியாவிடை பாடல் ஒன்றை எழுதினேன்.
பின்னர், நான்கு தோழிகளுடன் சேர்ந்து பாடவும் முடிவெடுத்தோம். அது என்னுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வாக கருதுகிறேன். முதல் கவிதை- இன்னும் என் நினைவிலுண்டு.
"அம்மா' என்ற ஒற்றைச் சொல்லே உலகத்தின் மிக உயர்வான அழகிய கவிதை. என் தாய் பற்றி தாய் மொழியில் பேசிக் கொண்டு முடிகின்றதாய் ஆத்மார்த்தமாக மிக உன்னதமாகவே உணர்ந்தேன்.
நான்கு உருவில் "கனா காணும் காலம்' எனும் நாவல் ஒன்றுதான் இதுவரை வெளிவந்துள்ளது. நிறைய கவிதைகள், சில சிறுகதைகள், நூல் பற்றிய விமர்சனம், பாடலாக்கம் போன்றவற்றிற்காக பல விருதுகள் கிடைத்துள்ளது.
என்னைப் பொருத்தவரை, என்னைச் சுற்றி நிகழ்கின்ற நிகழ்வில் எது என் மனதை ஈர்த்தோ, பாதித்தோ விடுகையில் அவற்றை படைப்பாக்குகின்றேன் அவ்வளவுதான்.
அந்த வகையில் 2017-ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவலகங்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட அரசு ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டிக்கான பாடலாக்கத்தில் முதலாம் இடத்தை வென்றதால் விருது கிடைத்தது. பிரதேச இலக்கிய விழா போட்டிகளிலும் பாடலாக்கத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளேன். மேலும் மண்முனைப்பற்று பிரதேச இலக்கிய பேரவையார் இளங்கலைஞர் ஆக்க இலக்கியத்திற்காக விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளேன்''என்றார்.