சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களையிடையே நல்ல வரவேற்பை பெற்ற "மெட்டிஒலி', "நாதஸ்வரம்' ஆகிய தொடர்களை இயக்கிய திருமுருகன். தனது சொந்த தயாரிப்பில் தற்போது இயக்கி நடித்து வரும் தொடர் "கல்யாண வீடு'. இதில் திருமுருகனுக்கு ஜோடியாக சூர்யா கதிரேசன் என்ற கதாபாத்திரத்தில் ஸ்பூர்த்தி கவுடா நடித்து வந்தார். இவர் திடீரென்று இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகை தற்போது நடித்து வருகிறார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த ஸ்பூர்த்தி, தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் அதனால் தான் தொடரில் இருந்து விலகியிருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும், இதுவரை தனக்கு ஆதரவு அளித்து தன் மீது அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்திருந்தார். சமீபத்தில் ஸ்பூர்த்தி கவுடாவின் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அதற்கான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர்களது நிச்சயதார்த்தம் பெங்களூரில் உள்ள லலித் மஹால் மாளிகையில் நடைபெற்றுள்ளது. திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சியின் "பிக் பாஸ்- சீசன் 4' நிகழ்ச்சியில், கலந்துக் கொண்டுள்ள போட்டியாளர்களில் சனம் ஷெட்டியும் ஒருவர். சனம் ஷெட்டி பெங்களூரைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் செட்டிலாகியுள்ளார். பெற்றோருக்கு ஒரே மகளான சனம், பிரபலமான மாடல், நடிகை மற்றும் அழகுப் போட்டியின் டைட்டிலை வென்றவர்.
"அம்புலி' திரைப்படத்தில் பூங்காவனம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். "வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவின் மூலம், சின்னத்திரையில் நுழைந்தார் சனம். திரையுலகில் நுழைவதற்கு முன்பு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ள சனம் ஒரு பன்மொழி வித்தகி. தென்னிந்திய மொழிகளில் சரளமாக பேசக் கூடியவர்.
தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். "மிஸ் சவுத் இந்தியா 2016' என்ற அழகுப் போட்டியின் டைட்டிலை வென்றுள்ள சனம் பிக் பாஸின் டைட்டிலை வெல்வாரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.