நாகூர் அனிபா உள்ளிட்ட இஸ்லாமிய பாடகர்களுடன் சம காலத்தில் இயங்கியவர் காயல் ஏ. ஆர். ஷேக் முகமது. இவர் பாடிய "ஈச்சை மரத்து இன்பச் சோலையில்....', "தமிழகத்து தர்காக்கள்...' உள்ளிட்ட பாடல்கள் இன்றும் பிரபலம். 100-க்கான சினிமா பாடல்களை பாடி புகழ் பெற்றவர். இவரது மகன் ரஷ்மி ரூமி குறும்படத் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ரூமி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் "சம்பாத்தியமே சகலமும்' என்ற குறும்படத்தை தயாரித்து நடித்துள்ளார். அருண் பாலா மணி இந்த குறும்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஷோபியா, ஹமீதா ரஹ்மான், முகமது சமீர், அதிரை தம்பிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் குறித்து ரஷ்மி ரூமி பேசும் போது... "" இங்கே ஒருவனுக்கு பணம் மீது அத்தனை வெறி. பணத்துக்காக எதையும் செய்ய துணிந்தவன். எதற்காக அவனுக்கு இவ்வளவு வெறி, வேட்கை... இப்படித்தான் நம் பார்வை இருக்கும். ஆனால், பணம்தான் எல்லாவற்றுக்கும் முக்கியம். அதை சரியான வழியில் சம்பாதிக்க வேண்டும். சம்பாத்தியம் மூலம் வருகிற பணம்தான் சமூகத்தில் அந்தஸ்தை உயர்த்தும் என்பதே கதை. தொடர்ந்து சினிமாவில் இயங்க இருக்கிறேன்'' என்றார் ரஷ்மி ரூமி.