சமீபத்தில் வெளியான "பாவ கதைகள்' இணைய தொடர் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. இதில் விக்னேஷ் சிவன் இயக்கிய "லவ் பண்ணா உட்ரணும்' படத்தில் அஞ்சலிக்கு அப்பாவாக நடித்தவர் பதம்குமார். முதல் படம் என்பது தெரியாத அளவுக்குச் சிறப்பாக நடித்ததால் தொடர்ந்து வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் இவருக்குக் குவிகிறது. ஆனால் இவர் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரும் கூட. அவர் அளித்துள்ள பேட்டியில் பேசும் போது... ""என் தந்தை வேணு தெலுங்கு சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளர். விட்டாலாச்சாரியாவின் அநேக படங்களுக்கு அவர்தான் ஒளிப்பதிவாளர். அவரைப் பின்பற்றி தொடக்கத்தில் ஒளிப்பதிவாளராக இருந்தேன். 3 ஹிந்தி படங்கள் இயக்கினேன்.
ஹிந்தியில் படம் தயாரித்தபோது ஐஸ்வர்யா ராய் என் படத்தில் தான் நடிப்பதாக இருந்தது. உலக அழகி போட்டியில் வென்ற பின்னர் ஒரு ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்ததால் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. பின்னர் தயாரிப்பு, விநியோகத்தில் இறங்கிவிட்டேன். நானி, வாணி கபூர் நடிப்பில் வெளியான "ஆஹா கல்யாணம்', விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிலம்பரசன், வரலட்சுமி நடித்த "போடா போடி' படங்கள் என் தயாரிப்புதான். என் தயாரிப்பில் அடுத்து பங்கஜ் திரிபாதி நடிப்பில் ஹிந்தி படம் தொடங்க உள்ளது. நீங்கள் என்னை இயக்குநராக்கினீர்கள். நான் உங்களை நடிகராக்குகிறேன் என்று விக்னேஷ் சிவன் உணர்வுபூர்வமாகச் சொன்னதால் நடித்தேன். நல்ல பெயர் கிடைத்துள்ளது. நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளேன். வாய்ப்புகளைப் பொருத்துப் பயணம் அமையும்'' என்றார்.