கரோனா காலங்களில் பாதிக்கப்பட்ட துறைகளில் பெருமளவு பாதிக்கப்பட்டது சினிமா துறை ஆகும், திரைத்துறை தற்போதுதான் தன் இயல்பு நிலைக்குத் திரும்பி வந்து கொண்டிருக்கிறது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் ஒரு வாய்ப்பை தரும் தளமாக உருவாகியுள்ளது சசிகலா தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனம் இளம் இயக்குநர்கள், புதிய தயாரிப்பாளர்கள், வெப் சீரிஸ் , குறும்பட இயக்குநர்கள் ஆகியோருக்கு உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.
இந்நிறுவனம் படத் தயாரிப்பு சார்ந்த அனைத்து வகையான வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும் இது இளம் மாணவ இயக்குநர்கள் மற்றும் அறிமுக இயக்குநர்களுக்கு தயாரிப்புக்குத் தேவையான உதவிகளையும் அத்தோடு மேலும் சில சிறப்பு சலுகைகளையும் செய்யத் தயாராக உள்ளது. இதனை பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ், நடிகை சாய் தன்ஷிகா, இசையமைப்பாளர் அம்ரிஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் பேசிய இயக்குநர் பாக்யராஜ் "" இது வாய்ப்புக்காகக் காத்திருக்கும் கலைஞர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் மேலும் இந்த தயாரிப்பு நிறுவனம் தரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பது அதன் கட்டமைப்பிலே புரிகிறது'' என்றார்.