தினமணி கொண்டாட்டம்

"மனதின் குரல்'- பாராட்டுப் பெற்றவர்!

14th Feb 2021 06:00 AM | -பிஸ்மி பரிணாமன்

ADVERTISEMENT


ஜனவரி 14-இல் ஐ. நா சபையின் சுற்றுப்புறச் சூழல் திட்டக் குழுவின் தலைவராக இருந்த எரிக் சொலெய்ம் ஒரு காணொளியை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்தக் காணொளி கேரளத்தில் கடல் போல விரிந்திருக்கும் வேம்பநாடு ஏரியில் மிதக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரித்து ஏரியை தூய்மையாக வைக்க முயற்சித்து வரும் என். எஸ். ராஜப்பனைப் பற்றியது. ராஜப்பனை எரிக் மிகவும் பாராட்டியிருந்தார். இந்தப் பாராட்டு பிரதமர் மோடியின் கவனத்தைக் கவர்ந்தது.

ஜனவரி 31-இல் நிகழ்த்திய "மனதின் குரல்' நிகழ்ச்சியில் ராஜப்பனின் சேவைகளைப் பிரதமர் மோடி புகழ்ந்ததுடன் "ராஜப்பன் நமது கடமைகளையயும் பொறுப்புகளையும் நினைவுபடுத்தியுள்ளார். ராஜப்பனை முன் மாதிரியாகக் கொண்டு ஒவ்வொருவரும் நாட்டிற்காகப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ராஜப்பன் ஜனவரி 31 முதல் அகில இந்திய அளவில் பிரபலமானார். எல்லா ஊடகங்களும் ராஜப்பன் குறித்த செய்திகளை வெளியிட்டன.

ராஜப்பன் யார்?

ராஜப்பன் கோட்டையத்தை அடுத்துள்ள குமரகத்தைச் சேர்ந்தவர். போலியோ தாக்கத்தால் மாற்றுத் திறனாளியானவர். தினமும் படகில் சென்று வேம்ப நாடு ஏரியில் மிதக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து அதை விற்று வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

ADVERTISEMENT

சுமார் 17 ஆண்டுகளாக ஏரியைச் சுத்தம் செய்யும் பணியில் ராஜப்பன் ஈடுபட்டுள்ளார். அவருக்கு வயது 72. திருமணம் செய்து கொள்ளவில்லை. தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். ""காலையில் தங்கை தரும் (பால் கலக்காத தேநீரை) குடித்துவிட்டுப் படகில் பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரிக்க ஏரியில் பயணம் செய்வேன். நடு நடுவே ஏரிக் கரையில் இருக்கும் தேநீர் கடைகளில் தேநீர் அருந்துவேன். மாலை வீடு திரும்பியதும் தான் சாப்பாடு'' என்கிறார் ராஜப்பன்..!

ADVERTISEMENT
ADVERTISEMENT