(மேல்மருவத்தூர் செல்லும் வழியில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
பசியாறு
- மீ.ஜாகிர் உசேன்,
வந்தவாசி.
(ஆவடியில் போக்குவரத்து காவல் துறை செய்துள்ள விளம்பரப் பதாகையில்)
அதிவேகமாகச் சென்றால் செய்கூலியும் (ஸ்பாட் பைன்) உண்டு; சேதாரமும் (விபத்து) உண்டு.
வி.சீனிவாசன்,
திருமுல்லைவாயில்.
(பாளையங்கோட்டை மருதகுளம் கிராமத்தில் உள்ள ஒரு கடையின் பெயர்)
தாத்தா கடை
-இ.ஜெயராமன்,
பாளையங்கோட்டை.
(நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலைத்தில் இரு பெண்கள் பேசிக் கொண்டது)
""ஏண்டி. புருஷன் வீட்டில் சண்டை போட்டுவிட்டு அம்மா வீட்டுக்கு வந்தே. இப்பே அம்மா வீட்டிலும் சண்டை. எங்கப் போகப் போறே''
""அப்பா வீட்டுக்குப் போறேன்''
-த.ஜெகந்நாதன், நாகர்கோவில்.
(சென்னை திருவல்லிக்கேணி சந்தையில்..)
""என்ன உன் மாமியார் அடுத்த ஜென்மத்துலேயும் நீயே மருமகளா வர வேண்டுமுன்னு சொல்றாங்க''
""போட வேண்டிய சண்டை நிறைய பாக்கி இருக்காம்''
- தீபிகா சாரதி,
சென்னை.
(திருச்சி பேருந்து நிலையத்தில் பாட்டியும், பேரனும் பேசியது)
""பேராண்டி. இப்போயெல்லாம் டிரஸ்ஸை வச்சு ஆம்பளையா, பொம்பளையான்னு கண்டுபிடிக்க முடியலை.''
""பாட்டி. ரொம்ப ஈஸி. தாடியும், மீசையும் இருந்தால் ஆம்பளை. இல்லைன்னா பொம்பள''
-சம்பத்குமாரி,
பொன்மலை.
நெறியோடு வாழ்வது கடினம்.
வெறியோடு வாழ்வது எளிது.
-வி.ந.ஸ்ரீதரன்,
சிறுசேரி.
அந்தப் பிரசித்தி பெற்ற கோயில் வாயிலில் பல ஆண்டுகளாக ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அவரது ஒரே சொத்து நல்ல கெட்டியான கருமை நிறத்தில் உள்ள திருவோடு மட்டும்தான். பரம்பரையாக வரும் திருவோடு. அன்றன்று திருவோடில் விழும் காசை வைத்து உணவு சாப்பிடுவார்.
தற்போது அவருக்கும் வயதாகி விட்டது. நீண்ட நேரம் நின்றுக் கொண்டே பிச்சை எடுக்கவும் முடியவில்லை.
ஒருநாள் பிச்சை எடுக்க நடந்து சென்றபோது, கால் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, திருவோடும் எகிறி போய் வெகுதூரம் விழுந்தது. அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால், திருவோடு உடையவில்லை. ஓரிரு இடங்களில் கீறல் மட்டுமே இருந்தது.
உடனே அருகே இருந்த ஒரு கடைக்காரரிடம் காட்டி, "அதை சரி செய்ய முடியுமா?' என்று கேட்டார். கடைக்காரரோ, "நல்ல வலிமையான உலோகமாக உள்ளது. இதை அருகேயுள்ள பாத்திரம் செய்பவரிடம் கொடுத்து சரி செய்து கொள்ளுங்கள்' என்று கூறினார்.
உரசிப் பார்த்து உறுதி செய்துக் கொண்ட பாத்திரக் கடைக்காரருக்கு மிகுந்த அதிர்ச்சி உண்டானது. அது பொன்னால் செய்யப்பட்ட திருவோடு.
""ஏனப்பா! இதை வைத்துக் கொண்டா? மூன்று தலைமுறையாக, தாத்தா, அப்பா என்று எல்லோரும் பிச்சை எடுத்து வருகின்றீர்கள்?. இதை வைத்து குடும்பத்தோடு நல்லபடியாக வாழ்வாங்கு வாழ்ந்து இருக்கலாமே!'' எனக் கேட்டார்.
பிச்சைக்காரருக்கு தலைசுற்றியது.
-செளமியா சுப்ரமணியன்,
பல்லாவரம்.
போராடிக் கிடைக்கும் தோல்விகூட
கொண்டாட வேண்டிய வெற்றிதான்.
-நெ.இராமகிருஷ்ணன்,
சென்னை-74.
வாட்ஸ் ஆஃப்பில் நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த "கம்யூனிட்டிஸ்' என்ற புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆஃப் குழுவில் 512 பேர் வரை உறுப்பினர்களாக சேர்க்கலாம். ஒருவர் நிர்வகிக்கும் (அட்மின்) தனித்தனியான குழுக்களை புதிய பெயரின் கீழ் ஒரே குழுவாக இணைக்கும் இந்த புதிய சேவைக்குதான் "கம்யூனிட்டிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஒரு கம்யூனிட்டிஸ் கீழ் அதிகபட்சமாக 50 குழுக்களை இணைக்கலாம். இதன் மூலம் பல்வேறு குழுக்களில் இருந்து தகவல்களை எளிதாகப் பெறவும் தெரிவிக்கவும் முடிவும். இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் தகவலை அனுப்ப முடிவும்.
கம்யூனிட்டிஸ்களில் இணைக்கப்பட்டவர்களுக்கு அந்தக் குழுவின் அட்மினும், சேர்க்கப்பபட்டவர் என இருவரை மட்டுமே காண்பிக்கும். பிறரை பற்றி வேறு யாரும் அறிய முடியாது. புதிதாக வைக்கப்படும் கம்யூனிட்டிஸ் பெயர் 24 எழுத்துகளுக்கு மேல் இருக்கக் கூடாது.
இந்தத் சேவையைப் பெற முதலில் பிளே ஸ்டோரில் வாட்ஸ் ஆஃப் செயலியை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். பின்னர், அட்மினாக உள்ள குழுவில் சென்று வலதுபுறம் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து "குரூப் இன்போ' - "ஸ்டார்ட் கம்யூனிட்டி' - உள்ளே சென்று புதிதாக உருவாக்கப்படும் கம்யூனிட்டியின் பெயரை குறிப்பிட வேண்டும்.
அட்மினாக உள்ள அனைத்து குழுக்களும் இதில் இடம்பெறும். இதில் தேவையான குழுக்களைத் தேர்வு செய்து கம்யூனிட்டியில் இணைத்து கொள்ளலாம். இந்தக் குழுவில் இடம்பெற்றவர்களுக்கு அனுப்பும் தகவல்கள் தனித்தனியாக குழு உறுப்பினர்களுக்கு சென்றடையும். கம்யூனிட்டிஸில் இணைக்கப்பட்டுள்ள குழுக்கள் அனைத்தையும் குழுவின் உறுப்பினர்கள் காணலாம். ஆனால், அந்தக் குழுவில் இடம்பெறாத உறுப்பினர்கள் பிற குழுவில் பகிரப்படும் தகவல்களைக் காண முடியாது. அதேநேரத்தில், அனைத்து குழுக்களுக்கும் பொதுவாக பகிரும் விடியோ உள்ளிட்ட தகவலை அனைத்து உறுப்பினர்களும் காணலாம். பிறரையும் அட்மினாக அங்கீகரிக்கும் வசதியும் கம்யூனிட்டிஸில் உள்ளது.
-அ.சர்ப்ராஸ்