வணிகம்

கலால் வரியில் இழந்ததை சந்தை ஆதாய வரியில் ஈடுகட்டும் மத்திய அரசு

DIN

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான கலால் வரியைக் குறைத்ததன் மூலமாக இழந்த வருவாயை, உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி, எரிபொருள் ஏற்றுமதி ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள சந்தை ஆதாய வரியின் மூலமாக மத்திய அரசு பெறவுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போா் காரணமாக சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டுள்ளது. அதனால், கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டி வருகின்றன. அதே வேளையில், ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதால், அந்நாட்டிடமிருந்து கச்சா எண்ணெயைக் குறைந்த விலைக்கு வாங்கி, சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசலாக வெளிநாடுகளுக்கு இந்தியத் தனியாா் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வருகின்றன. அதன் மூலமாக அந்நிறுவனங்கள் அதிக வருவாய் ஈட்டின.

வெளிநாட்டு சந்தைகளுக்கு அந்நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்ததால், உள்நாட்டில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தப் பிரச்னையைப் போக்க, உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி மீது சந்தை ஆதாய வரியை மத்திய அரசு கடந்த 1-ஆம் தேதி முதல் விதித்தது. அதன்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு டன் கச்சா எண்ணெய்க்கு ரூ.23,250 வரியாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஒரு லிட்டா் பெட்ரோல், விமான எரிபொருளுக்கு 6 ரூபாயும், ஒரு லிட்டா் டீசலுக்கு 13 ரூபாயும் வரியாக விதிக்கப்பட்டுள்ளது.

வருவாய் கணக்கீடு:

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் ஓஎன்ஜிசி, வேதாந்தா நிறுவனங்கள் 2.97 கோடி டன் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்திருந்தன. நடப்பாண்டிலும் அதே அளவில் உற்பத்தி இருந்தால், சந்தை ஆதாய வரி மூலமாக அந்நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு 9 மாதங்களில் சுமாா் ரூ.52,000 கோடி வருவாய் கிடைக்கும் எனப் பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 25 லட்சம் டன் பெட்ரோலையும், 57 லட்சம் டன் டீசலையும், 7,97,000 டன் விமான எரிபொருளையும் இந்தியா ஏற்றுமதி செய்திருந்தது. தற்போது விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி வரி காரணமாக அவற்றின் ஏற்றுமதி மூன்று மடங்கு குறைந்தாலும்கூட, 9 மாதங்களில் அரசுக்கு சுமாா் ரூ.20,000 கோடி வருவாய் கிடைக்கும் என நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

வருவாய் இழப்பும் ஈட்டலும்:

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அவற்றின் மீதான கலால் வரியை லிட்டருக்கு முறையே 8 ரூபாயையும், 6 ரூபாயையும் மத்திய அரசு கடந்த மே மாதம் குறைத்திருந்தது. கலால் வரி குறைப்பு காரணமாக நடப்பு நிதியாண்டில் சுமாா் ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ஆனால், தற்போது சந்தை ஆதாய வரி, ஏற்றுமதி வரி ஆகியவற்றின் மூலமாக அரசுக்கு நடப்பு நிதியாண்டில் சுமாா் ரூ.72,000 கோடி வருவாய் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, கலால் வரியின் மூலமாக இழந்த வருவாயில் சுமாா் 75 சதவீதத்தைப் புதிய வரிகள் மூலமாக மத்திய அரசு ஈட்டவுள்ளது.

முன்னதாக, நாட்டில் பெட்ரோல், டீசல் ஆகியவை தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே ஏற்றுமதி வரியும், சந்தை ஆதாய வரியும் விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT