தமிழகத்தில் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு 11 மாத ஊதியம் மட்டுமே தரப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மே மாத ஊதியம் ஜூன் மாதத்தில் வழங்கப்படும் என அமைச்சர்கள் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த உத்தரவு வெளியாகியுள்ளதால், பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
11 மாதங்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், பகுதிநேர ஆசிரியர்களுக்கு 11 மாதங்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என்றும், மே மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படமாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் அறிவிப்பால் 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் மே மாத ஊதியம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.