ஆம்பூர்: ஆம்பூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதமடைந்தது.
ஆம்பூரில் வழக்கம் போல காலையிலிருந்து கடுமையான வெயில் காய்ந்தது. வெயிலின் காரணமாக புழுக்கம் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
இந்நிலையில் மாலை 4 மணி முதல் ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
அதனால் உமராபாத் பகுதியில் ஆம்பூர் - பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலையில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் உமராபாத் பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சார விநியோகமும் அப்பகுதியில் தடைப்பட்டது.
நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் அங்கு சென்று சரிந்து விழுந்த மரத்தினை அகற்றி மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆம்பூர் அருகே உமராபாத், கடாம்பூர், பனங்காட்டூர், நரியம்பட்டு, சின்னவரிகம், மிட்டாளம், பைரப்பள்ளி பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது.