பல்கலைக்கழகங்களில், பட்டமளிப்பு விழாவை ஆளுநர் வேண்டுமென்ற காலதாமதம் செய்கிறார் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதிலளித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவி அளித்திருக்கும் விளக்கத்தில், தமிழகத்தில் இருந்து இதுவரை 7 பல்கலைக்கழகங்கள் மட்டுமே பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநரிடம் அனுமதி கோரியுள்ளன.
அனுமதி கோரியிருக்கும் தமிழக பல்கலைக்கழங்களில் பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.
அதன்படி ஜூன் 16 - சென்னை பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவும் (தாற்காலிக), ஜூன் 19ஆம் தேதி திருவள்ளுவர் பல்கலைக கழகத்திலும், ஜூன் 28ல் பெரியார் பல்கலைக்கழகத்திலும் ஜூலை 7-ஆம் தேதி தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழகத்திலும் பட்டமளிப்பு விழாக்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் மனோன்மேனியம் பல்கலை கழகம், பாரதிதாசன் பல்கலை கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்கான தேதிகள் பின்னர் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அமைச்சர் பொன்முடியின் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை தரப்பில் 7 பல்கலைக்கழகங்கள் மட்டுமே பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி கோரியிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய அமைச்சர்களை அழைத்து பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும் எனக் கோருவதால் தாமதமாகிறது. பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற 9.29 லட்சம் மாணவர்கள் பட்டமளிப்புக்காக காத்திருக்கின்றனர்.
ஆளுநரின் தலையீட்டால் பட்டமளிப்பு விழா நடத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் மட்டுமே பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது.
எப்போது வேண்டுமானாலும் பட்டமளிப்பு விழாவை நடத்த தமிழக அரசு தயாராகவுள்ளது. பட்டமளிப்பு விழா குறித்து ஆளுநர் கேட்பது கூட இல்லை என அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.