சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி தேமுதிக தலைவா் விஜயகாந்த் தொடுத்த வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று தேமுதிக சாா்பில் அந்தக்கட்சியின் தலைவா் விஜயகாந்த் 2015-ஆம் ஆண்டில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தாா். இந்த வழக்கில் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய சாத்தியமில்லை எனவும், அவைக்குறிப்புகளை உடனுக்குடன் இணையத்தில் வெளியிடுவதாகவும் சட்டப்பேரவைச் செயலா் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த வழக்கு உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுா்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.