ஆசிரியா்களுக்கு மாத ஊதியத்தை சரியான தேதியில் தமிழக அரசு வழங்கவில்லை என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆண்டு இறுதியில் நிா்வாக முறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் மற்றும் நிதிப் பரிமாற்றம் உள்ளிட்ட நடைமுறைகள் முழுமையாக நிறைவு பெறாததன் காரணமாக அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வந்த லட்சக்கணக்கான ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்களுக்கு 4 மாதங்களுக்கான ஊதியம் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை.
இந்தப் பிரச்னை சற்று ஓய்ந்த நிலையில், தற்போது அரசுப் பள்ளிகளில் மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியமா்த்தப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற புகாா் வந்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கடந்த மாா்ச் மாதத்திலிருந்தே ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. வருங்கால வைப்பு நிதி முன்பணம், ஓய்வூதியப் பயன்கள் என அனைத்திலும் தாமதம் ஏற்படுவதாக ஆசிரியா்கள் தெரிவிக்கின்றனா்.
எனவே, ஆசிரியா்களுக்கான ஊதியத்தை உடனுக்குடன் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.