உத்தமபாளையம்: தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை பிடிபட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் மேகமலை உள்ளிட்ட 7 மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள தேயிலை தோட்டங்கள், நீர் நிலைகளை ரசிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மேகமலைக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக அரிக்கொம்பன் யானை நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு கருதி அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு மாவட்ட வனத்துறையினர் தடை விதித்தனர்.
இதே போல போல மாவட்டம் நிர்வாகம் சார்பில் கம்பம், கூடலூர் உள்ளிட்ட சில பகுதிகளுக்கும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியில் திங்கள்கிழமை வனத் துறையினர் அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அரிக்கொம்பன் கோதையாறு மேலணைப் பகுதியில் விடப்பட்டது.
இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கம்பம், கூடலூர் நகராட்சி பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் நீக்கியது.
ஆனால், வனத்துறை சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படாமல் தொடர்வதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
எனவே, அரிக்கொம்பன் காட்டு யானையை பிடிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க வேண்டுமென மக்களும், சமூக ஆர்வலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.