மதுரை:மதுரையில் விசாரணை என்ற பெயரில் மதுரை மண்டல ஜிஎஸ்டி இயக்குனரக நுண்ணறிவுப் பிரிவு அலுவலகத்தில் வணிகர்களை அடைத்துவைத்துள்ளதாகக் கூறி ஏராளமான வியாபாரிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜிஎஸ்டி அதிகாரிகள் வரி கட்ட வேண்டும் என கூறி துன்புறுத்துவதாக வணிகர்களின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
மதுரை கீழமாசி வீதி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பல சரக்கு கடைகள் செயல்பட்டு வருகின்றது.
இந்த பகுதியில் ஸ்டேஷ்னரி, சோப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மளிகை பொருட்கள் விற்பனையை செய்ய கூடிய கடைகளை நடத்திவரும் குணாளன் மற்றும் அவரது உறவினர்களான கதிரவன், சக்கரவர்த்தி ஆகிய 3 வர்த்தர்களிடம் கடந்த 15 நாட்களாக மதுரை மண்டல ஜிஎஸ்டி இயக்குநரக நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் 3 பேரும் தனது வர்த்தகத்தின் மூலமாக 66 கோடி ரூபாய் அளவிற்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறி விசாரணைக்காக அழைத்துவந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 3 வர்த்தகர்களையும் மதுரை மண்டல ஜிஎஸ்டி இயக்குநரக நுண்ணறிவுப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக நேற்று காலை அழைத்துவந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 3 பேரையும், அவர்களது குடும்பத்தினரோ, வர்த்தகர்கள் சங்கத்தினரோ நேரிலோ , தொலைபேசியிலோ தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளதாகக் கூறி இன்று காலை வர்த்தகர்களின் குடும்பத்தினர் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தினர் ஜிஎஸ்டி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது காவல்துறையினர் ஜிஎஸ்டி அலுவலகத்தின் முன்பாக குவிந்துள்ளனர். வர்த்தர்கள் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் நுண்ணறிவுப் பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து தல்லாகுளம் காவல் சரக உதவி ஆணையர் ஜெகந்நாதன் தலைமையிலான காவல்துறையினர் ஜிஎஸ்டி அலுவலகத்தினரிடம் 3 வர்த்தகர்களின் நிலை குறித்து கேட்டறிந்த பின்னர் வியாபாரிகளிடமும், வர்த்தகர்களின் குடும்பத்தினரிடமும் பேசி அழைத்துசெல்வதாக தெரிவித்துள்ளனர்.