சிறந்த உயிர்க்கோள காப்பக மேலாண்மைக்கான யுனெஸ்கோ விருதை இந்தியாவிலிருந்து முதல் முறையாக பெற்றுள்ள ராமநாதபுரம் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் காப்பாளர் ஜெகதீஷ் பகானுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் கூறியிருப்பதாவது, இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின் இயக்குநருமான ஜெகதீஷ் பகன் அவர்கள் யுனெஸ்கோ அமைப்பால் வழங்கப்படும் உயிர்க்கோளகக் காப்பக மேலாண்மைக்கான சிறந்த உயிர்க்கோள காப்பக மேலாண்மைக்கான மைக்கேல் பாட்டீஸ் விருதுக்குத் (Michel Batisse Award) தேர்வாகி, தமிழ்நாடு வனத்துறைக்கும் அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு நம் பாராட்டுகள்.
நமது அரசு அமைத்த மரைன் எலைட் (Marine Elite) படையால்தான் இது சாத்தியமானது என அவர் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன்.
ஜூன்-14 அன்று பாரிஸ் நகரத்தில் நடைபெறும் நிகழ்வில் விருதைப் பெறவுள்ளதோடு, மன்னார் வளைகுடாப் பகுதியின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்த அறிக்கையையும் உலக அரங்கில் விளக்கிக் காட்டவுள்ள ஜகதீஷ் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.