கோவை : ஒடிசா ரயில் விபத்து விவகாரத்தில் யாரையும் காப்பாற்றவோ, எதையும் மூடி மறைக்கவோ விரும்பவில்லை என்று கோவையில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், யார் தவறு செய்திருந்தாலும் காப்பாற்ற நினைக்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதற்க்கு முன்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் பேசும் போது, 48 கோடி மக்களுக்கும் மேலாக முதல்முறையாக பாஜக ஆட்சியில் வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் உரிமை என்றாலும் அதை ஏழைகளுக்கு சென்றடைய வங்கி கணக்குகள் செயல்படுகிறது. முத்ரா வங்கி திட்டத்தில் 68 சதவீதம் பெண்கள் பயனாளிகளாக உள்ளனர். இந்திய நாட்டுப் பெண்களுக்கு இரத்த சோகை அதிகம். சத்து குறைபாடு காரணமாக அதிகமாக பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
கர்ப்பிணி கால பராமரிப்பு, பாலூட்டும் நிலை, இளம் சிறார்களுக்கு சுகாதார திட்டங்கள் ஆகியவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு உதவி செய்ததின் வாயிலாக மீண்டும் தொழில் செய்ய உதவி கொடுத்துள்ளோம்.
ஏழு குறைபாடுகள் இருந்தால் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் என்பதை 21 குறைபாடுகளாக வகைப்படுத்தி உள்ளது மத்திய அரசு. இதனால் 25 லட்சம் பேர் இதுவரை பயனடைந்துள்ளனர்.
ரயில்வே துறையில் மாற்றங்கள் என்பதை கண்களால் பார்த்து வருகிறீர்கள். பிரதமரால் அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களை முதலில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பான ரயில் பயணத்தை செயல்படுத்த மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறிப்பிட்ட ஒடிசா ரயில் விபத்து சம்பவம், துரதிருஷ்டவசமான. சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கோரப்பட்டுள்ளது. ஒரு சம்பவத்தின் காரணமாக ஒட்டுமொத்தமாக ரயில்வே அமைச்சகத்தை மறந்து விட முடியாது. இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற விரும்பவில்லை, எதையும் மூடி மறைக்க விரும்பவில்லை.
யார் தவறு செய்திருந்தாலும் மத்திய அரசு அவர்களை காப்பாற்ற நினைக்காது. கர்நாடக மாநில வெற்றியை வைத்துக்கொண்டு ராகுல் காந்தி, பாஜகவை வீழ்த்த விடலாம் என்றால் அந்தக் கனவு பலிக்காது. ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்து பேசுவது நாட்டின் மரியாதைக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.