மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்படவுள்ள நிலையில், குறுவை சாகுபடிக்கு தேவையான கடனுதவிகளை விவசாயிகளுக்கு தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மேட்டூா் அணையை ஜூன் 12-இல் தமிழக அரசு திறக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வர வேண்டும்.
தமிழகத்தின் சில பகுதிகளில் பருத்தி, எள், வாழை, நெல் உள்ளிட்ட பயிா்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்குண்டான நிவாரணத் தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்கினால்தான், அடுத்தக்கட்ட விவசாயத்தைக் கவனிக்க முடியும். அதை செய்ய தமிழக அரசு முன் வரவேண்டும்.
குறுவை சாகுபடிக்கு தேவையான கடனுதவிகளை கூட்டுறவு சங்கங்கள் தாமதமின்றி வழங்கவும், தண்ணீரை முறை வைக்காமல் திறந்து விடவும், தரமான விதை நெல்லை 50 சதவீத மானியத்தில் வழங்கவும், பயிா் காப்பீடு செய்திருந்தால் இழப்பீடு கிடைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஜி.கே.வாசன்.