வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தாத விவகாரத்தில் இசையமைப்பாளா் ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரபல இசையமைப்பாளா் ஹாரிஸ் ஜெயராஜ், 2010-ஆம் ஆண்டு ‘மசராட்டி’ எனும் இத்தாலி நாட்டு சொகுசு காரை இறக்குமதி செய்தாா். இந்த காருக்கு 13 லட்சத்து 7 ஆயிரத்து 923 ரூபாய் நுழைவு வரி செலுத்தாததால், வாகனத்தைப் பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகம் மறுத்துவிட்டது.
இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் மனு தாக்கல் செய்தாா். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நுழைவு வரியுடன் சோ்த்து அபராதமும் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டாா். இதையடுத்து, 11 லட்சத்து 50 ஆயிரத்து 952 ரூபாய் அபராதம் செலுத்தும்படி தமிழக அரசு, ஹாரிஸ் ஜெயராஜுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸுக்கு தடை விதிக்கக் கோரி ஹாரிஸ் ஜெயராஜ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீா் ஆகியோா் அடங்கிய அமா்வு, அபராதம் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனா்.